Wednesday, 16 January 2019

நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் சென்னை சிறுவன

நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் சென்னை சிறுவன்!
சென்னையை சேர்ந்த குகேஷ் என்ற சிறுவன் நாட்டின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும், உலகின் 2வது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

இதன் மூலம் இளம் கிராண்ட் மாஸ்டராக இருந்த சென்னையை சேர்ந்த பிரகானந்தாவின் சாதனையையும் குகேஷ் முறியடித்துள்ளார். சென்னையை சேர்ந்த பிரகானந்தா என்ற சிறுவன் 12வயது 10மாதங்கள் 13நாட்கள் கடந்த நிலையில் செஸ் போட்டியின் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். எனினும் ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி கர்ஜாகின்(12வயது 7மாதங்கள்) என்ற சிறுவன் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

இவரின் சாதனையை இதுவரை யாரும் முறியடித்தது இல்லை. இந்நிலையில் டெல்லியில் சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி நடைபெற்று வந்தது. இதன் 9வது சுற்றில் தினேஷ் சர்மாவை வீழ்த்தி சென்னையை சேர்ந்த குகேஷ்(12வயது 7மாதங்கள் 17நாட்கள்) என்ற சிறுவன் வெற்றிப்பெற்றார். இதனை தொடர்ந்து நாட்டின் மிக குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை குகேஷ் பெற்ற நிலையில் உலக அளவில் 2வது இளம் கிராண்ட் மாஸ்டராகவும் உள்ளார்.

இதன் மூலம் பிரகானந்தாவின் சாதனையை குகேஷ் முறியடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கடந்த ஆண்டு கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்ற பிரகானந்தா உள்ளார். குகேஷ் தனது 5வயதில் இருந்து செஸ் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற செஸ் போட்டியில் சர்வதேச மாஸ்டராக குகேஷ் தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி, பாங்காங்கில் நடைபெற்ற ஓபன் போட்டியில் 3வது இடத்திலும், செர்பியாவில் நடைபெற்ற ஆர்பிஸ் போட்டியில் 2ம் இடத்தையும் குகேஷ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year